பூதப்பாண்டி, செப்டம்பர் 04 –
ஆரல்வாய்மொழியில் உள்ளபொறியியல் கல்லூரியில் கடந்த 2023-ம் ஆண்டில் எம்.பி.ஏ படிப்பில் சேர்ந்த தென்காசி மாவட்டம், கீழபாவுரைச் சார்ந்த மாணவன் வினோத்குமார் என்பவர் தனது குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை தொடராமல் நின்றுள்ளார். இந்நிலையில் மாணவன் வினோத்குமார் கடந்த ஜுலை மாதம் பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு வந்து தனது அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் பலமுறை கேட்டும் தரவில்லை எனவே தனது சான்றிதழை பெற்றுத்தரக் கோரி மனு கொடுத்துள்ளார்.
பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர்/ நீதிபதி கார்த்திகேயன் உத்தரவுப்படி சட்டத் தன்னார்வலர் பரமேஸ் மூலம் எதிர்மனுதாரரான கல்லூரி முதல்வருக்கு நேரில் ஆஜராகும்படி அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவின்முன் ஆஜரான கல்லூரியின் துணை முதல்வர் மாணவன் வினோத்குமாரின் அனைத்து அசல் சான்றிதழ்களையும் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், பூதப்பாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதியுமாகிய கார்த்திகேயனிடம் ஒப்படைத்தார். மேற்படி அசல் சான்றிதழ்களை வினோத் குமாரிடம் நீதிபதி வழங்கினார்.



