ஈரோடு, அக். 22 –
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்டது பவானி சாகர் அணை. 105 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இந்த அணை கட்டியதில் இருந்து 25 வது முறையாகவும் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாகவும் 102 அடியை எட்டி உள்ளது. இதனால் பவானி ஆற்றின் அணையின் பாதுகாப்பு கருதி கீழ் மதகுகள் வழியாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
மேலும் ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக 12.88 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சத்தியமங்கலம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த அணை 42 அடி உயரம் கொண்டது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக இந்த அணை நிரம்பியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.


