நாகர்கோவில், ஜூலை 6 –
குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முருங்கவிளை சந்திப்பு, கருங்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் தங்களின் அன்றாட பயணங்களுக்குப் போக்குவரத்து வசதியின்றி சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து மாற்றியமைக்கப்பட்ட பேருந்து நேற்று முதல் இயக்கப்பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை வகித்தார். தாரகை கத்பர்ட் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் ஆகியோர் மாற்றியமைக்கப்பட்ட புதிய பேருந்து சேவையில் பயணச்சீட்டு பெற்று பயணிகளுடன் பயணம் மேற்கொண்டார்கள்.
இந்த பஸ் குளச்சலில் இருந்து ரீத்தாபுரம், பாலபள்ளம், வெள்ளியாவிளை, கருங்கல், திப்பிறமலை தொடக்கப் பள்ளி, எட்டாணி, முருங்கவிளை, கஞ்சிக்குழி, பள்ளியாடி, இரவிபுதூர்கடை, சாங்கை வழியாக மார்த்தாண்டம் செல்லும். நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், உதவி மேலாளர் (வணிகம்) மகேஷ், கல்குளம் வட்டாட்சியர் ராஜேஷ், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



