ஈரோடு: ஆக.31.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி மாயமான பெற்றோரை 3 நாட்களாக பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால், அவர்களது மகன் கவின்ராஜ் ஏமாற்றத்துடன் ஈரோடு திரும்பினார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டை அடுத்த கனகபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (67). இவரது மனைவி கிருஷ்ணவேணி (56). இருவரும் ஈரோட்டில் உணவகம் நடத்தி வருகின்றனர். கடந்த 14-ம் தேதி நாமக்கல்லைச் சேர்ந்த உறவினர்கள் 9 பேருடன் சென்னையைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்கு சுற்றுலா சென்றனர்.
கடந்த 25-ம் தேதி காலை பெற்றோர் தங்களது மகன் கவின்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். மறுநாள் அவர்கள் சுற்றுலா சென்ற நேபாளத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய ரசுவா மாவட்டத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோரை தொடர்பு கொள்ள கவின்ராஜ் பலமுறை முயன்றும் தொடர்பு கிடைக்காததால் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து கடந்த 27-ம் தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்ட கவின்ராஜ், பெங்களூரு சென்று அங்கிருந்து விமானம் மூலம் காத்மாண்டு சென்றார். அங்கு மருத்துவ முகாம்கள், ராணுவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3 நாட்களாக பெற்றோரைத் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் அவர் ஈரோடு திரும்பினார்.
இதுகுறித்து கவின்ராஜ் கூறுகையில், வெள்ளம் ஏற்பட்ட நாளன்று தனது பெற்றோர் மற்றும் அவர்களுடன் சென்ற குழுவினர் நேபாள எல்லைப் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் சரிபார்ப்பு அலுவலகக் கட்டிடத்தில் இருந்ததாகவும், அப்போது ஏற்பட்ட பெருவெள்ளம் அந்தக் கட்டிடத்தைச் சூழ்ந்ததாகவும் தெரிவித்தார்.
தற்போது அந்தக் கட்டிடத்தைச் சுற்றி 30 அடிக்கும் மேல் சேறும் சகதியும் சேர்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் சவாலாக இருப்பதாகவும், வெள்ளத்தில் மாயமானவர்கள் பட்டியலில் தனது பெற்றோரின் பெயர்களையும் நேபாள அரசு சேர்த்துள்ளதாகவும் கவின்ராஜ் கண்ணீருடன் தெரிவித்தார்.



