நாகர்கோவில், 19.08.2026
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடலோர கிராம பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு அரசானது மீன்வளத்துறையின் சார்பில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பகுதிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, வளாகத்தில் உள்ள மீன்பிடித்துறைமுகத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி, படகுகள் பாதுகாப்பாக வந்து செல்லும் முகத்துவாரப் பகுதி மற்றும் மீன்களைக் கையாளுவதற்குக் கட்டமைக்கப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம் ஆகியவற்றின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரமான முறையில் மீன்களை ஏலம் விடுவதற்கும், ஏலக்கூடத்தை எப்போதும் தூய்மையாகப் பராமரிப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, விசைப்படகு மற்றும் பாரம்பரிய மீன்பிடி தொழில் செய்யும் மீனவப் பிரதிநிதிகளையும், உள்ளூர் தொழிலாளர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடப்பட்டது. மீனவர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது.
அப்போது மீனவர்கள் ஏலக்கூடத்தினையும், ஏலக்கூடத்தின் அருகில் உள்ள சிறிய அளவிலான கழிவுநீர் ஓடையினையும் சீரமைத்து தருமாறும், கழிவறையினை மற்றொரு இடத்திற்கு மாற்றி தருமாறும், மருத்துவ வசதிகள் ஏற்படுத்திடுமாறும் கோரிக்கை வைத்தார்கள். அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மீன்வளத்துறை துணை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் துறைமுக முகத்துவாரத்தில் தொடர்ந்து ஏற்படும் மணல் திட்டுக்களை அகற்றி, படகுகள் தடையின்றி வந்து செல்ல நிரந்தர தூர்வாரும் நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கோபிநாத், மீன்வளத்துறை செயற்பொறியாளர் பிரேமலதா, உதவி இயக்குநர் மீன்வளத்துறை விர்ஜில் கிராஸ், கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், உதவி பொறியாளர்கள், மீனவ பிரதிநிதிகள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



