நாகர்கோவில், ஆக. 3 –
நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தோப்புக்குள் பச்சிளம் ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் கிடந்தது. இது தொடர்பாக நர்சு ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் பின்புறம் தென்னந்தோப்பு ஒன்றில் நேற்று முன்தினம் காலை தொப்புள் கொடியுடன் கூடிய ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பகுதியினர் உடனடியாக வடசேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தவறான உறவில் பிறந்ததால் குழந்தையை கொன்று வீசி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எனவே இது குறித்து இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் தலைமையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அப்போது அந்த தனியார் மருத்துவமனையில் யாராவது குழந்தை பெற்று அந்த குழந்தையை தோப்பில் வீசி இருக்கலாமா? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இதில் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வந்த நர்சு ஒருவர் ஏற்கனவே வயிறு வலிப்பதாக கூறி வந்ததுடன், சமீபகரமாக அவர் பணிக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது. எனவே இது குறித்து அந்த நர்சிடம் போலீசார் விசாரணை நடத்த சென்றனர். இதில் அவர் உடல்நல குறைவால் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த நர்சிடம் விசாரித்தனர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்றவர், போலிஸ் விசாரணை தீவிரமானதால் குழந்தை தனக்கு பிறந்தது தான் என்பதை ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது. அந்த நர்ஸ் திருமணமாகாதவர் எனவும், காதலனுடன் நெருக்கமான உறவில் கருத்தரித்து, குழந்தை இறந்து பிறந்ததால் பயத்தில் வீசியதாக கூறியுள்ளார். ஆனால் இதில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. குழந்தையின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தை கொல்லப்பட்டதா? அல்லது இறந்து பிறந்ததா? என்பது தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர். அந்த நர்ஸ் தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பில் உள்ளார்.


