கிருஷ்ணகிரி, ஜூலை 30 –
கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் ஒரு பகுதியாக நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் காவேரிப்பட்டினம் மாதேஷ், முரளி கிருஷ்ணன், தங்கமுத்து, ஆஷிகா, சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நுகர்வோர் உரிமைகள், போலி பொருட்களை அடையாளம் காணும் முறைகள், தரமான பொருட்களை தேர்வு செய்வது, ரேஷன் கடைகளில் எடையை சரிபார்த்து பொருட்களை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.
மேலும் இந்த கருத்தரங்கில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் சந்தைகளில் தரமற்ற மற்றும் போலி பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதால், நுகர்வோர் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார். பொருட்களை வாங்கும்போது அதன் தரச்சான்று, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, உற்பத்தி செய்யப்பட்ட விவரங்களை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளும் போது அவற்றின் எடையை சரிபார்த்து வாங்க வேண்டும் என்றும், எந்த கடையில் பொருட்களை வாங்கினாலும் அதற்கான ரசீது கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பில் என்பது நுகர்வோரின் உரிமையை பாதுகாக்கும் முக்கிய ஆவணமாகும். பொருட்களில் குறைபாடு ஏற்பட்டாலோ அல்லது சேவையில் பாதிப்பு ஏற்பட்டாலோ நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தை எளிதாக அணுகுவதற்கு அது உதவும் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள், இணையவழி கொள்முதல் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தவறான விளம்பரங்களை நம்பி பொருட்களை வாங்குவதால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் மோசடிகளைத் தவிர்ப்பது தொடர்பாகவும் தெளிவாக விளக்கமளித்தார். நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் புகார் அளிக்கும் நடைமுறை, தேவையான ஆவணங்கள் மற்றும் சட்ட ரீதியான தீர்வுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மேற்கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை உடனடியாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் சிறப்பாக செயல்படும். கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தனின் செயல்பாட்டையும் பாராட்டினர்.
இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு நுகர்வோர் உரிமைகள் தொடர்பான பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டனர்.



