நாகர்கோவில், நவம்பர் 29:
நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் அம்பலம் திருத்தி காலனியை சேர்ந்த 17 வயது சிறுவன், வெல்டிங் ஒர்க் ஷாப் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இறச்சகுளத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 26ம் தேதி மாலை 5.40 மணியளவில் பேச்சுவார்த்தைக்காக சிறுவனை அவர்கள் அழைத்துள்ளனர். இதை நம்பி இறச்சகுளம் அன்னம் குளம் அருகே உள்ள ரப்பர் கம்பெனி பக்கம் சிறுவன் சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த அவர்கள் சிறுவனை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். இதில் சிறுவன் படுகாயம் அடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் படுகாயம் அடைந்த சிறுவனின் தாயார் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வடசேரி ஓட்டுப் புரை தெருவை சேர்ந்த ரமேஷ், இறச்சகுளத்தை சேர்ந்த விக்னேஷ், அபினேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


