நாகர்கோவில், ஏப். 18 –
குமரியில் தேர்தல் பிரச்சார விதிமுறை மீறல் சம்பந்தமாக நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக வேட்பாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளராக சபின் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக கொல்லங்கோடு பகுதியில் வாகன பிரச்சாரம் நடந்தது. இதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விண்ணப்பித்ததற்கு அதிகமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தி உள்ளனர். இது குறித்து தேர்தல் கண்காணிப்பாளர் அலுவலர் ஹரிஷ் குமார் (33) என்பவரின் புகாரின் பேரில் வேட்பாளர் சபின் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதே போல் பத்மநாபபுரம் தவெக வேட்பாளர் கிருஷ்ணகுமார் என்பவர் மணலிக்கரை சந்திப்பில் இரு சக்கர வாகன பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு, அதிக அளவில் பைக்குகள் மற்றும் பொதுமக்களை கூட்டி விதிமுறைகளை மீறியதாக கொற்றிகோடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரியஜனிஃபர் அந்த தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறி ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கட்சி கொடி கட்டி பிரச்சாரம் செய்துள்ளதாக அவர் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


