நாகர்கோவில், ஜூன் 15 –
குமரி மாவட்ட நீர்வளத்துறையின் நாகர்கோவில் பாசனபிரிவு உதவிப்பொறியாளர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள தேரூர் கிராமத்தில் தண்டநாயக்கன்குளம் உள்ளது. இந்த குளத்தின் மடையிலிருந்து அந்த குளப்புரவிற்கும், தத்தையார்குளத்திற்கும் கோதைகிராமம் ஊர் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால் உள்ளது. நாஞ்சில்நாடு புத்தனார் கால்வாய் தண்ணீரும் இந்த வாய்க்கால் வழியாகத்தான் பாசனத்திற்கு செல்கிறது.
இந்த நிலையில் புதுக்கிராமம் ரயில்வே கேட்டை ஒட்டி ரயில்வேத் துறையால் பக்க சுவர் கட்டப்பட்டிருந்தது. தற்போதைய கன மழையால் பக்கச்சுவர் முழுமையாக சரிந்து விழுந்து, வாய்க்காலில் தண்ணீர் போக்கிற்கு இடையூறாக கிடக்கிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக விவசாய பகுதிக்கு தண்ணீர் செல்ல முடியாமல் விவசாயம் பாதிக்கப் பட்டுள்ளதுடன், மேல்பகுதியில் தண்ணீர் தேங்கி அப்பகுதி விளைநிலங்கள் சதுப்புநிலமாக மாறி வருகின்றன.
எனவே நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக இடிந்து விழுந்த கட்டுமானங்களை அகற்றி தண்ணீர் வடிய ஏற்பாடு செய்ய வேண்டும். ரயில்வேத்துறையினர் பக்கச்சுவரை முழுமையாக அகற்றி மீண்டும் உறுதியுடன் பக்க சுவர் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.



