மார்த்தாண்டம், நவ. 3 –
குமரி – கேரளா எல்லைப் பகுதியில் ஏடிஎம் மூலம் பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டதாக பாறசாலை அருகே இடிச்சக்கப்பிலா மூடு பகுதியை சேர்ந்த ஷெபிக், கொல்லங்கோடு அருகே செங்கவிளை பகுதியை சேர்ந்த அபின் ஆகியோரை பாபுசாலை போலீசார் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பிடித்து விசாரணை நடத்தினர். போலீஸ் பிடியில் சிக்கிய 2 பேரும் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களின் வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டுகளை திருடி சென்று தெலுங்கானா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள நபர்களுக்கு கொடுப்பதாகவும், அவர்கள் எடிஎம் மூலம் பணம் எடுத்துவிட்டு, இவர்களுக்கு தொகைக்கு ஏற்றவாறு கமிஷன் கொடுப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அபின், ஷெபிக்குடன் குமரி – கேரளா எல்லை பகுதியைச் சேர்ந்த சிலர் இதுபோல பெண்களின் வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டுகளை திருடி கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்தது.
இந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ராஜன் (34) என்பவரை நேற்று பாறசாலை போலீசார் கைது செய்தனர். இதை அடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஏடிஎம் மோசடியில் தொடர்பு உள்ளது உறுதியானது. தொடர்ந்து போலீசார் ராஜன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தெலுங்கானா, உத்தர பிரதேசத்தில் உள்ள நபர்களைப் பிடிப்பதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஏடிஎம் மூலம் பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்ட குமரி வாலிபர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



