கன்னியாகுமரி, மார்ச் 27 –
வெள்ளமடம் அருகே சகாயநகர் குடியிருப்பு பகுதி திருநங்கைகளிடையே வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு பொங்கல் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பானைக்குப் பொட்டு வைத்து, அரிசியிட்டு பொங்கல் பொங்கி வரும் வேளையில், அங்கிருந்த திருநங்கைகளுடன் இணைந்து “பொங்கலோ பொங்கல் – தேர்தல் பொங்கல்” என முழக்கமிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள்.
அதனைத்தொடர்ந்து, தேர்தலில் திருநங்கைகளின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் திருநங்கைகள் அனைவரும் ஆர்வத்துடன் தங்களது கையெழுத்துக்களைப் பதிவு செய்தனர். தொடர்நது அனைவரும் வாக்காளர் உறுதிமொழியியை ஏற்றனர்.
தொடர்ந்து கலெக்டர் கூறுகையில்: சமூகத்தில் திருநங்கைகள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். ஜனநாயகத்தின் மிகப்பெரிய கடமையான வாக்களிப்பதில் அவர்களின் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். ஒருவரும் விடுபடாமல் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வின் நோக்கம். நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் 102 திருநங்கையர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, துறை அலுவலர்கள், திருநங்கையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



