கிருஷ்ணகிரி, ஏப். 6 –
பர்கூர் சட்டசபை தொகுதி, தி.மு.க., வேட்பாளர் மதியழகன் எம்.எல்.ஏ., எருமாம்பட்டி, பாலேகுளி, மாரிசெட்டிஹள்ளி, நெடுங்கல், பெண்ணேஸ்வரமடம், தட்ரஹள்ளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். பெண்கள் ஆரத்தி எடுத்தும், செல்பி எடுத்தும் அவரை வரவேற்றனர். பாலேகுளியில் தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுடன் பணியாற்றியவாறு அவர்களிடம் ஓட்டு கேட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். அன்புக்கரங்கள் என்ற திட்டம் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் தாயுள்ளத்தோடு உதவுகிறார். அடுத்த ஆட்சியில் காலை உணவு திட்டம், 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படவுள்ளது. 8,000 ரூபாய் கூப்பன் வழங்கப்படவுள்ளது. அதில், மக்கள் தாங்கள் விரும்பும் பொருட்களை வாங்கலாம்.
10 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் அறிவித்துள்ளார். எண்ணற்ற திட்டங்கள் வாக்குறுதிகளாக வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் சொல்வதை மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்து காட்டி உள்ளோம். உங்கள் பகுதியிலேயே புதிய ரேஷன் கடை, துணை சுகாதார நிலையம், பஸ் ஸ்டாப், சாலை வசதிகள் என கேட்டதெல்லாம் எம்.எல்.ஏ வாக இருந்து நான் செய்து கொடுத்துள்ளேன்.
எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராக அமர்ந்தவுடன் மேலும் பல திட்டங்களை செய்வேன். பர்கூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை வழங்கியதற்கு வெற்றியை பரிசாக தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.



