தக்கலை, ஜூலை 18 –
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுதிறன் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி மையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 54.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. கட்டிடத்தை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில்: நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நமது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதான் ராஜினாமாவைக் கோரியுள்ளார். மேலும் காங்கிரஸ் சார்பில் நாங்கள் இதை வலியுறுத்தி வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் நாங்கள் எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறோம். மத்திய அரசு அவரை நிச்சயமாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண்கிறிஸ்டோபர், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா, வட்டாரத் தலைவர்கள் ஹனுகுமார், ஜெபா, ரவிசங்கர், முன்னாள் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், முதன்மை கல்வி அலுவலர் ஆரோக்கியராஜ், மாவட்ட கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன், வட்டார கல்வி அலுவலர் ஜெய்சிங் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



