திருப்பூர், மே 25 –
திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர், முன்னாள் எம்எல்ஏ க.செல்வராஜ் திமுகவில் இருந்து விலக போவதாக அறிவித்திருந்தார். தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று மீண்டும் மாவட்ட செயலாளராக தொடர்வதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக அமைந்துள்ள தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வருகை தந்த செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, திருப்பூர் ராஜா ராவ் வீதியில் உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்திற்குச் சென்று அங்குள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய க.செல்வராஜ்: கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும், கலைஞர் காட்டிய வழியில் வேறு எந்தக் கட்சிக்கும் செல்லாமல் திமுகவின் அனுதாபியாகவே நீடிப்பேன். மீண்டும் மு.க.ஸ்டாலின் அவர்களே தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டும் என்று விரும்பினேன். இருப்பினும், கழகத் தலைவரின் அன்பான கட்டளையையும், பேச்சையும் தட்ட முடியாமல் மீண்டும் கட்சிப் பணியாற்ற வந்துள்ளேன். கட்சித் தலைவரே நேரடியாகத் தொடர்புகொண்டு பேசுகிறார் என்றால், இதைவிட ஒரு சாதாரணத் தொண்டனுக்கு வேறு என்ன பெருமை வேண்டும் என்று தெரிவித்தார். இதில் க.செல்வராஜ் முன்னிலையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.



