தென்காசி, அக். 6 –
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் கல்லத்திகுளம் கிராமத்தில் மின் உற்பத்தி செய்வதற்காக தனியார் நிறுவனத்தால் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வரும் கல்லத்திகுளம் பகுதியில் மான்கள் மற்றும் வனவிலங்குகள் அதிகம் வாழும் சூழலில் அந்த பகுதியில் உள்ள சுமார் லட்சக்கணக்கான மரங்களை அழித்து தற்போது அந்த தனியார் நிறுவனமானது சோலார் பேனர்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக கூறி கல்லத்திகுளம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அந்தக் கிராமத்தில் வசித்து வரும் பள்ளி குழந்தைகள் மற்றும் ஊர் மக்கள் வருகை தந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தியதை தொடர்ந்து அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுப்பதற்காக அனுப்பி வைத்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய நிலையில் வெளியே காத்திருந்த சிலர் தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கதவு பூட்டப்பட்டது.
அதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் காவல் துறையினருக்கும் , பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு தீயணைப்பு வீரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தண்ணீரை அடிக்க முற்பட்ட போது மேலும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 80-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.



