தூத்துக்குடி, ஜூலை 1 –
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் 25-வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவக் கண்காட்சியினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.
அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் பயிலும் அனைத்து துறையைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து நடத்தும் மருத்துவ கண்காட்சி MEDVERSE 2025 இன்றையதினம் அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி மக்கள் மத்தியில் மருத்துவ அறிவையும், நோய்த்தடுப்பு விழிப்புணர்வையும் உருவாக்கும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது.
இக்கண்காட்சியானது இன்று முதல் 05.07.2025 வரை காலை 09.00 மணி முதல் 03.00 வரை நடைபெறும். இக்கண்காட்சியின் சிறப்பம்சங்களாக மனித உடலமைப்பை விளக்கும் தெளிவான மாதிரிகள், முதலுதவி சிகிச்சைகள் அறிப்பது குறித்தும், இதய நுரையீரல் புத்துயிர் சிகிச்சை குறித்தும், அடிப்படை உயிர்காக்கும் சிகிச்சை முறைகள் ஆகியவை பற்றிய நிகழ்நேர விளக்கங்கள், துறை வாரியாக கட்டமைக்கப்பட்ட விளக்க மையங்கள், நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் புதுமைகள் மற்றும் சுவரொட்டிகள் உள்ளிட்டவை இடம்பெறும்.
கண்காட்சியை பள்ளி மாணவர்கள் இன்று முதல் 03.07.2025 வரையும், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ ஆர்வலர்கள் 04.07.2025 மற்றும் 05.07.2025 ஆகிய தேதிகளில் பார்வையிடலாம் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவர்கள், பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



