தூத்துக்குடி, ஜூலை 18 –
தூத்துக்குடி நகரின் பிரதான சாலைகளில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உடனடியாக அந்த கடைகளை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால், பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 63 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி சில கடைகள் மூடப்பட்டிருந்தாலும், தூத்துக்குடி எட்டயபுரம் சாலை மற்றும் குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில், கலைஞர் அரங்கம் அருகில் ஏற்கனவே செயல்பட்டு வந்த ஒரு டாஸ்மாக் கடையின் அருகிலேயே அடுத்தாக புதிதாக மேலும் இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
ஒருபுறம் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்துவிட்டு, மறுபுறம் ஒரே பகுதியில் கூடுதலாக கடைகள் திறப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். மது போதையால் கொலை, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் புதிய கடைகள் திறப்பது சமூக விரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது.
மேலும், இந்த பகுதி பெண்கள், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தும் பிரதான சாலையாகும். புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது அருந்துவோரின் நடமாட்டம் அதிகரித்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களும் சாலையை பயன்படுத்துவோரும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தான் மது போதையில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றது. தற்போது தன்னை தூய சக்தியாக கருதிக் கொள்ளும் தவெக அரசும் அதே பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அந்த பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மூன்று டாஸ்மாக் கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.



