தஞ்சாவூர், மே 30 –
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொல்லியல் துறைக்கும் இருந்த கருத்து மோதல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பெரிய கோவில் கோட்டை மதில் சுவரில் தூய்மை பணியை மீண்டும் தொடங்கியது.
தஞ்சாவூர் பெரிய கோயிலை சுற்றியுள்ள அகழியில் தூய்மை பணி 16ம் தேதி தொடங்கி நிறைவடைந்தது. இதனிடையே கோயிலை சுற்றியுள்ள கோட்டை சுவரில் வளர்ந்துள்ள செடிகள் மரங்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் கட்டுமானம் பாதிக்கப்படுவதாக தொல்லியல் துறையினர் கூறியதால் இப்பணி மே 27ம் தேதி நிறுத்தப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கும் இந்திய தொல்லியல் துறைக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் பெரிய கோவில் அகழியில் தூர்வாரப்பட்ட பணியை தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் முரசொலி ஆய்வு செய்தார். அப்போது கோட்டை மதில் சுவரில் தூர்வாரும் பணிக்கு இந்திய தொல்லியல் துறையினர் இடையூறாக இருப்பதாக மக்களவை உறுப்பினரிடம் மாவட்ட நிர்வாகத்தினர் முறையிட்டனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் தூய்மை பணிக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் மேற்பார்வையிட்டு உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்கள் வழங்குமாறும், மாவட்ட நிர்வாகம் கட்டுமானங்களை சேதப்படுத்தாமல் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு மக்களவை உறுப்பினர் அறிவுரை வழங்கினார். இதன் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொல்லியல் துறைக்கும் இடையே இருந்து வந்த கருத்து மோதல் முடிவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து பெரிய கோவில் கோட்டை மதில் சுவரில் தூய்மை பணி மீண்டும் தொடங்கியது. இதில் மதில் சுவரில் வளர்ந்துள்ள மரங்கள், செடி, கொடிகளை மாநகராட்சி பணியாளர்கள் வெட்டி அகற்றி சுத்தம் செய்தனர். இப்பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உடன் இருந்தனர்.



