தஞ்சாவூர், நவம்பர் 6 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறையால் அனுமதிக்கபடாத பாலிதீன் பொருள்கள் ஆகியவற்றை உணவு பரிமாறவும் பொட்டலங்கள் செய்யவும் பயன்படுத்தாமல் இருக்கும் பெரிய வகை உணவகங்களுக்கு தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறையால் ரூபாய் 1 லட்சம் ரொக்கத்துடன் விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வியாபாரிகளுக்கு (பதிவு சான்று பெற்றவர்களுக்கு) ரூபாய் 50,000 விருதும் வழங்கப்படுகிறது.
ஆர்வம் உள்ளவர்கள் வருகின்ற 25 ஆம் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போரின் உணவகங்கள் பதிவு, உரிமம் பெற்று இருக்க வேண்டும். குறைந்தது ஒவ்வொரு உணவகத்திலும் ஒருவர் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான குழுவினரால் பரிசீலனை செய்து கள ஆய்வுக்குப் பிறகு சென்னை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையருக்கு பரிந்துரைக்கப்படும்.
விண்ணப்ப படிவம் கியூ ஆர் கோடு மூலம் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சுய சரிபார்ப்பு பட்டியல் உடன் இணைத்து மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தை பிடிஎப் (PDF) வடிவில் dofssavsplastic@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது பென்ட்ரைவ் மூலமாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



