திருவாரூர், நவம்பர் 13 –
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 2500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் 50 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது “சென்னை சில்க்ஸ்” குழுமம்.
திருவாரூர் மாவட்ட மக்கள் வேளாண் தொழிலையே பிரதானமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். விவசாயப்பணி முடிந்த பின் வேலை தேடி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொழில் முதலீடு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு துறை அமைச்சரும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி.ராஜா இருவரும்
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடைய சொந்த மாவட்டமும், டெல்டாவின் முக்கிய அங்கமாகவும் திகழும் திருவாரூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பையும், தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கி,
பரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்ற உயர்ந்த நோக்கத்தோடு, கிராமப்புற பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதன்படி நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் ஆடை உற்பத்தி அலகு
அமைத்திட “சென்னை சில்க்ஸ் குழுமத்துடன்” புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன்மூலம் 2200 பேருக்கு நேரடியாகவும், 300 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இச்செய்தி அறிந்த மன்னார்குடி தொகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



