மார்த்தாண்டம், பிப். 11 –
குமரி மாவட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் மஹா சிவாலய ஓட்டம் 14, 15, 16 தேதிகளில் நடைபெற உள்ளது. 2 வது சிவாலயமான ரிஷப ராசி பரிகார ஸ்தலமான திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் சாலை கடந்த 18 ஆண்டுகளாக செப்பனிட படாமல் குண்டும் குழியுமாக காட்சியளித்ததை தொடர்ந்து பக்தர்கள் பலமுறை சாலையை செப்பனிட கோரி மனு கொடுத்தும் பேருராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 15 தினங்களுக்கு முன்பு 18 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கல் வெட்டிற்கு அஞ்சலி செலுத்தி கோசாலை பசுமாட்டிற்கும் தாமிரபரணி ஆற்றிற்கும் மனு கொடுத்து நூதன போராட்டம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் கோயிலுக்கு ஆய்வுக்கு வந்து அதிகாரிகளுக்கு உடனே பணிகளை துவங்க அழுத்தம் கொடுத்தார். இது போன்று அதே நேரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான விஜய தரணி கோயிலுக்கு ஆய்வுக்கு வந்தார்.
அவரும் சாலை செப்பனிடாத காரணத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்தார். இந்த நிலையில் பாகோடு பேருராட்சி நிர்வாகம் நேற்று கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயில் இருந்து கோயிலுக்கு செல்லும் சாலை இண்டர் லாக் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



