மதுரை, நவ. 12 –
மதுரை அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுகாதாரத் துறையை சீர்கெட்ட துணையாக மாற்றிய அமைச்சர் மா.சு. எடப்பாடியாரை பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் கிடையாது.
மதுரையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து பின் செய்தியாளர்கள் சந்திப்பில் எய்ம்ஸ் பணிகள் நடக்க ஸ்டாலின் அழுத்தம் தான் காரணம் என்றும், அதேபோல 11 அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டிடப் பணிகள் அரைகுறையாக இருந்தது. அது முழுமை அடைவதற்கு திமுக தான் காரணம் என்று இப்படி வாய்க்கு வந்ததை அமைச்சர் மா.சு. பேசலாமா ?
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளை அம்மாவின் அரசு கொண்டு வந்தது இதில் எடப்பாடியார் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு அதற்காக நிதியை பெற்று பணிகளையும் செய்தார் இதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 1450 மருத்துவ இடங்களை எடப்பாடியார் பெற்று தந்தார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பாரதப் பிரதமரை அழைத்து
அடிக்கல் நாட்டினர். இதற்காக அன்றைக்கே 224 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது .மேலும் பூர்வாங்க பணிக்காக சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு அன்றைக்கு 18-கோடி அளவில் பணம் ஒதுக்கப்பட்டு பணிகளும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இந்தப் பணிக்காக ஜெய்க்கா நிறுவனம் மூலம் நிதி ஒப்புதல் கோரப்பட்டது. தொடர்ந்து எடப்பாடியார் மத்திய அரசிடம் வலியுறுத்தி திட்டத்திற்காக பணிகளை விரைவுப்படுத்தினார். ஆனால் இந்த திட்டத்தை முதலமைச்சர் அழுத்தமே காரணம் என்று வாய் கூசாமல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்குமாறு பேசி உள்ளார். அப்படி என்றால் கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வருவோம் என்று கூறினீர்களே? அதில் ஒரு கல்லூரியாவது கொண்டு வர முடிந்ததா? உங்களால் திட்டங்களை கொண்டு வர முடியாது எடப்பாடியார் கொண்டு வந்தால் அந்த திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தான் உங்களின் வாடிக்கையாக உள்ளது.
இதே கடந்தாண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு ஆய்வு செய்த போது இதில் 35 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் இல்லை, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்ற பல்வேறு காரணங்களை காட்டி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதற்கு நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள்? அதற்கு உங்கள் நிர்வாக சீர்கேடு தானே காரணம்.
அதே போல கடந்தாண்டு இந்தியா முழுவதும் 6,850 மருத்துவ இடங்களை மத்திய அரசு அறிவித்தது இதில் தமிழகத்தில் 350 இடங்களை அறிவித்தது இதில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு எத்தனை இடங்கள் என்று தேடிப் பார்த்தால் ஒரு இடம் கூட இல்லை அத்தனையும் தனியார் கல்லூரிக்கு தான் அந்த இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அரசு மருத்துவமனைகளில் 24 ஆயிரம் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் ஆனால் தற்போது 12000 மருத்துவர்கள் தான் உள்ளார்கள். இதே அம்மாவின் ஆட்சி காலத்தில் 35,000 மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் 4ஆம் இடத்தில் இருந்த சுகாதாரதுறை தற்போது 7 வது இடத்திற்கு சென்று விட்டது. சுகாதாரத் துறையை சீர்கெட்ட துணையாக மாற்றிய அமைச்சர் மா.சு. எடப்பாடியாரை பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.



