கிருஷ்ணகிரி, ஜன. 20 –
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் இருந்து வரட்டனபள்ளி செல்லும் வழியில் உள்ளது போத்தநாம்பட்டி கிராமம். இங்குள்ள இளைஞர்களுக்கும் அதேபகுதி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த இளைஞர்களுக்கும் அடிக்கடி அடிதடி, சண்டை நடப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொங்கல் திருவிழாவின்போது எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த இளைஞர்கள் சிலர், போத்தநாம்பட்டியை சேர்ந்த சில இளைஞர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர். ஆகவே உடனடியாக காவல்துறையினர் அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சாலை மறியலில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து வந்த மகாராஜாகடை காவல் ஆய்வாளர் சேகர் மற்றும் போலீசார் அங்கு சாலைமறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதை ஏற்காத ஊர் பொதுமக்கள் அடிதடியில் ஈடுபட்ட நபர்களை உடனடிபாக கைது செய்ய வலியுறுத்தி சுமார் ஒரு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த ஏ டி எஸ் பி சங்கர் மற்றும் கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமாக காணப்பட்டது. போத்தநாம்பட்டி இளைஞர்களை தாக்கிய நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.



