சிவகங்கை, பிப். 11 –
தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் பணி செய்யும் கௌரவ விரிவுரையாளர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தேர்வுகள் நெருங்கி வரும் நேரத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணி செய்து வருகிறார்கள். ஆனாலும் இவர்களின் வாழ்க்கை தொடர்ந்து ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது.
பொதுவாக கல்லூரிகளில் பணி செய்து வரும் நிரந்தர பேராசிரியர்கள் 2 இலட்சத்திற்கும் மேலாக மாதச் சம்பளம் பெறுகின்றனர். ஆனால் அதே பணியைச் செய்து முடிக்கும் கௌரவ விரிவுரையாளர்கள் வெறும் ரூ. 25 ஆயிரம் மட்டும் சம்பளம் பெற்று வேலை செய்கிறார்கள். இந்த நிலைப்பாட்டால் சுமார் 8 ஆயிரம் கௌரவ விரிவுரையாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறது.
எனவே இவர்கள் முன்வைக்கும் கோரிக்கை: பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த ரூ.57, 700ஐ மாத ஊதியமாக வழங்க வேண்டும். ஆண்டில் 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். பி.எப் மற்றும் இ .எப் அனைத்து கௌர விரிவுரையாளர்களுக்கும் வழங்க வேண்டும். பெண் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். ஆகியவற்றை இவர்கள் கோரிக்கையாக முன் வைக்கின்றனர். எனவே அரசின் கவனம் இவர்கள் பக்கமும் திரும்புமா என பொறுத்திருந்து பார்ப்போம்.



