நாகர்கோவில், மே 28 –
அருமனை அடுத்த புலியூர்சாலை பகுதியை சேர்ந்தவர் அகிலேஷ் (28) பிஇ பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பி இ பட்டதாரியான தினேஷ் என்பவரும் நண்பர்கள். இருவரும் வேலைக்கு வெளிநாடு செல்ல திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் இருவரும் வெளிநாடு செல்வதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகி உள்ளனர். அப்போது அங்குள்ள நிர்வாகிகள் இருவரையும் சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தை கூறி அதற்கு தலா ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 13 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர்.
இதனை நம்பிய அகிலஷ் மற்றும் தினேஷ் இருவரும் சில தவணைகளாக மொத்தம் 13 லட்சம் ரூபாய் பணத்தை அந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்டு டிராவல்ஸ் சார்பாக கூறியபடி சிங்கப்பூருக்கு வேலைக்கு அவர்களை அனுப்பி வைக்காமல் நாட்களை கடத்தி சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அகிலேஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததை அடுத்து கொடுத்த 13 லட்சம் ரூபாயை திரும்ப தருமாறு அந்த நிறுவனத்தில் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து இருவரும் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணை அடிப்படையில், பண மோசடியில் ஈடுபட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த சடகோபன் சீனிவாசன் (60) மற்றும் சேலத்தை சேர்ந்த ரகுமான் கான் (45) ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


