தஞ்சாவூர், செப்.14:
தஞ்சாவூரில் காவிரி வண்டல் கலை இலக்கியக் கூடுகை சார்பில், தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சான்றோர்களை கவுரவிக்கும் விழாவும் நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சாவூர் மக்களவை உறுப்பினரும், இலக்கியக் கூடுகையின் கவுரவத் தலைவருமான முரசொலி தலைமை வகித்தார்.
விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, செல்லத்துரை, அன்பரசு, நளினி, தேன்மொழி, உஷாராணி, பியூலா ராணி, பாலமுருகன், ராஜேஸ்வரன், சித்ரா, ராஜலட்சுமி, ரவீந்திரன், குமணன், கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
மேலும், பட்டுக்கோட்டை மக்கள் மருத்துவர் செல்லப்பனுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருதும், தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் காமராசுக்கு உ.வே.சா. விருதும், திரைப்பட இயக்குனர் சரவணனுக்கு செவாலியர் சிவாஜி கணேசன் விருதும், த.மு.ஏ.க.ச. பொதுச் செயலாளர் களப்பிரானுக்கு தமிழ்வேல் உமாமகேசுவரனார் விருதும், குருவாடிப்பட்டி இயற்கை விவசாயி அன்புச்செல்வனுக்கு நெல் ஜெயராமன் விருதும், சுற்றுச்சூழல் ஆர்வலர் யாழினி தவச்செல்வனுக்கு நம்மாழ்வார் விருதும் வழங்கப்பட்டன.
விருதுகளை தமிழ்நாடு அரசு முன்னாள் முதன்மைச் செயலாளர் சண்முகம் மற்றும் கவிஞர் நெல்லை ஜெயந்தா ஆகியோர் வழங்கி பாராட்டிப் பேசினர். தொடர்ந்து விருது பெற்றவர்களுக்கு சந்தனமாலை அணிவித்து கவுரவப் பட்டங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இலக்கியக் கூடுகை தலைவர் ஆசிப் அலி, துணைத் தலைவர் சுப்பிரமணிய சர்மா, தாமரை பன்னாட்டு பள்ளி தலைவர் வெங்கடேசன், கலைமாமணி டாக்டர் நரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இலக்கியக் கூடுகை பொதுச்செயலாளர் யோகம் செழியன் வரவேற்றார். நிறைவாக ஆலோசனைக் குழு உறுப்பினர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.



