ஆரல்வாய்மொழி, நவ. 04:
குமரி மாவட்டம் தோவாளை அருகே விசுவாசபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனில் தேங்காய் லோடு ஏற்றி வந்த லாரி மோதி விபத்து சென்டர் மீடியனில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இப்பகுதியில் உள்ள செண்டர் மீடியனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாடு பகுதியை சார்ந்த கண்ணன் 49 என்பவர் ஒரு லாரியில் ராமநாடு பகுதியில் இருந்து நாகர்கோவில் அடுத்த ராஜகமங்கலத்திற்கு தேங்காய் லோடினை ஏற்றிக்கொண்டு ஆரல்வாய்மொழி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தார். அப்பொழுது தோவாளை அருகே விசுவாசபுரம் பகுதி அருகே வரும் பொழுது குமரன்புதூர் அருகே அமைக்கப்பட்டு இருந்த சென்டர் மீடியனில் எதிர்பாராத விதமாக லாரி பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன் பகுதியானது முற்றிலும் சேதமடைந்தது மேலும் விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு வருகின்ற பேருந்துகள் மற்றும் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி செல்லுகின்ற பேருந்துகள் கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகியது. இது பற்றி தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தினை மாற்றி அமைத்து போக்குவரத்து நெருக்கடியினை சரி செய்தனர் மேலும் பொக்லின் இயந்திரம் வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கிய லாரியினை உடனே அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்ததுடன் விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரின் பணியினை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்
அடிக்கடி விபத்துக்குள்ளாகும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை:-
நாகர்கோவில் ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் விபத்தினை தடுக்கும் விதத்தில் பலப் பகுதிகளில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது குறிப்பாக வெள்ளமடம் அடுத்த லாயம் விலக்கு பகுதியிலும் அதுபோன்று குமரன்புதூர் பகுதியிலும் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது இதில் வெள்ளமடம் அருகே அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் வசதியாகவும் சிரமம் இல்லாமலும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டு வருகிறது ஆனால் குமரன்புதூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனால் பொதுமக்களுக்கு இடையூறாகவும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுகின்ற விதத்திலும் அடிக்கடி விபத்து ஏற்படுகின்ற சூழலையும் ஏற்படுகிறது. அதாவது சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ள இப்பகுதி சாலையானது மற்ற பகுதியில் இருப்பதைவிட மிகவும் குறுகிய நிலையில் காணப்படுகிறது. மேலும் இச்சாலையின் ஒரு பகுதியில் உப்பாத்து ஓடை செல்வதாலும் சாலையின் மறுபுறத்தில் பஸ் நிறுத்தம் உள்ளதாலும் இப்பகுதி மிகவும் வளைவான பகுதி என்பதாலும் பயணிகளை ஏற்றுவதற்காக இப்பகுதியில் பேருந்து நிற்கின்ற பொழுது பேருந்தின் பின்னால் வருகின்ற வாகனங்களுக்கு இப்பகுதியில் சென்டர் மீடியன் இருப்பது தெரிவதில்லை எனவே இரவு நேரங்களில் வருகின்ற கனரக வாகனங்கள் மற்றும் சொகுசு கார்கள் இந்த சென்டர் மீடியனில் மோதி அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிறது விபத்துகள் ஏற்படக் கூடாது என்பதற்காக அமைக்கப்பட்ட இந்த சென்டர் மீடியனால் அடிக்கடி விபத்துக்குள்ளாகி மரண சம்பவங்களும் படுகாயம் அடைந்த சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது எனவே இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனை அகற்றி அகலமான சாலை பகுதியில் சென்டர் மீடியன் அமைத்தால் இரு பகுதிகளிலும் செல்கின்ற பேருந்துகள் சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக இருக்கும் எனவும் விபத்துகள் தவிர்க்கப்படும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



