கோவை, மார்ச் 2 –
கோவை மாவட்ட காவல் துறையினர் சார்பில், மாவட்டத்தை முழுமையாக போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்கும் நோக்கில் Operation CASO (Cordon and Search Operation) என்ற பெயரில் மாவட்டம் முழுவதும் விரிவான அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இச்சோதனை நடவடிக்கை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது. அவரின் நேரடி கண்காணிப்பில் மொத்தம் 300 போலீசார் களமிறக்கப்பட்டனர். பேரூர் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் இந்த நடவடிக்கை சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.
முன்னதாக Clean கோவை போன்ற சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கல்லூரி மாணவர்கள், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட நபர்கள் மற்றும் பழங்குற்றவாளிகள் மீது கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதனைத் தொடர்ந்து இந்த ஆபரேஷன் CASO தீவிரப்படுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் தனியார் விடுதிகள் மற்றும் வாடகை வீடுகள் மீது கவனம் செலுத்தி கே.ஜி.சாவடி, செட்டிபாளையம், மதுக்கரை காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 120 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 5 கல்லூரி மாணவர்கள் அடங்குவர். கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு முன்பு வழக்குகள் நிலுவையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்:மெத்தாம்பெட்டமின் (Methamphetamine) – 10.35 கிராம், கஞ்சா – 4 கிலோ, கஞ்சா சாக்லேட்–2 கிலோ, கஞ்சா ஆயில்–50 மில்லி, இருசக்கர வாகனங்கள்–22 (முறையான ஆவணங்கள் இன்றி) ஆயுதங்கள் – 1 கத்தி, 1 அரிவாள், குறிப்பாக சிந்தெட்டிக் டிரக் வகையைச் சேர்ந்த மெத்தாம்பெட்டமின் (Methamphetamine) கைப்பற்றப்பட்டிருப்பது மிக முக்கியமானதாகும். இப்பொருள் இளைஞர்களின் உடல் மற்றும் மனநலத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான போதைப்பொருளாகும்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. என்று தெரிவித்தார்.



