கோவை, ஆக. 28:
கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் பேரவை தொடக்க விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள தனலட்சுமி அம்மாள் பன்னோக்கு அரங்கில் நடைபெற்றது. விழாவில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைமைத் தொண்டரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இன்றைய தலைமுறை இளைஞர்கள் விரைவான மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும், மாணவர் பேரவை பொறுப்பேற்றவர்கள் கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகளாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், மாணவர்களிடையே ஏற்படும் மனஅழுத்தம், வேலைவாய்ப்பின்மை, புறக்கணிப்பு போன்ற காரணங்கள் போதைப்பொருள் கலாச்சாரத்தை நோக்கி அவர்களைத் தள்ளுவதாகக் குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் ஒழிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், அதற்கான அடிப்படை காரணங்களையும் கண்டறிந்து தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
விழாவில் மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், செயலர், துணைத்தலைவர், இணைச்செயலர் மற்றும் விளையாட்டுத்துறைச் செயலர்களுக்கு அவர்களின் பெயர் மற்றும் பதவி பொறிக்கப்பட்ட வில்லைகளை கே.அண்ணாமலை வழங்கினார்.
தொடர்ந்து, போதைப்பொருள் தவிர்ப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையைத் தடுப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசப்பற்று ஆகியவற்றை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். விழாவிற்கு கல்லூரி செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமை வகித்தார். மேலாண்மைக்குழு பொருளாளர் ஓ.என். பரமசிவன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் வே.சங்கீதா வரவேற்புரையாற்றினார்.
விழாவின் நிறைவில், மாணவர் பேரவைத் தலைவரும் முதுஅறிவியல் கணிதம் இரண்டாம் ஆண்டு மாணவியுமான பி.சந்தியா நன்றியுரையாற்றினார்.



