மார்த்தாண்டம், அக். 10 –
கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்வின் (38). இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அணுக்கோடு பகுதியை சேர்ந்த பாபு மகள் தர்ஷினி (31). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவ தினம் இரவு சுமார் 9 மணி அளவில் ஜெஸ்வின் வீட்டிலிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி தர்ஷினி, அவரது தந்தை பாபு (55), மச்சான்கள் தனிஷ் (30), தினேஷ் (29) தர்ஷினி உறவினர்கள் முத்து, சுஜா, ஆகினேஷ் ஆகியோர் சேர்ந்து ஜெஸ்வின், அவரது அப்பா தங்கமணி ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது தொடர்பாக ஜெஸ்வின் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மனைவி மாமன், மச்சான், உறவினர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


