நாகர்கோவில் கடைகள் புகுந்து
டெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது
சரியாக தைத்துக் கொடுக்காததால் ஆத்திரம்
நாகர்கோவில், மே 24:
நாகர்கோவிலில் டெய்லர் கொலையில் ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர். சரியாக தைத்து கொடுக்காததால் ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் குத்திக் கொன்றதாக கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வன். (60) டெய்லர். நாகர்கோவில் டதி ஸ்கூல் அருகே உள்ள பேலஸ் ரோட்டில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் டெய்லர் கடையில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இவரிடம் துணி தையல் கொடுக்க வந்த போலீஸ்காரர் இதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார் இது குறித்து அறிந்ததும் வடசேரி போலீசார் சென்று விசாரணை நடத்தி செல்வன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட செல்வனின் மகன் மிக்கேல் ராஜ் (28) அளித்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். சம்பவப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் கொலை நடந்த டெய்லர் கடையில் இருந்து சட்டை அணியாமல் ஹெல்மெட் மட்டும் அணிந்து கொண்டு வெளியேறும் வாலிபர், பின்னர் பைக்கில் செல்லும் காட்சிகள் இருந்தன. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். ஏ. எஸ். பி., லலித்குமார் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இதில் செல்வினை கொலை செய்தது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த செய்துங்க நல்லூர் பகுதியை சேர்ந்த சந்திரமணி (37) என்பது தெரிய வந்தது. நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து நேற்று காலை அவரை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் சந்திரமணியை வடசேரி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து சந்திரமணி கூறியதாவது:
நான் நாகர்கோவிலில் உள்ள பிரபல ஓட்டலில் சமையல் வேலை பார்த்து வருகிறேன். எனது பேண்ட் தைக்க டெய்லர் செல்வனிடம் கொடுத்தேன். அவர் சரியாக தைத்து தரவில்லை. இது குறித்து செல்வன் கடைக்கு சென்று கேட்டேன். அப்பொழுது அவர் என்னை திட்டினார். இதனால் ஆத்திரத்தில் அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து முதுகு, தலையில் குத்திவிட்டு சென்றுவிட்டேன். அவர் இறந்தது தெரியாது. எனக் கூறியுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி பின்னர் அவரை கைது செய்தனர். சரியாக தைத்து தரவில்லை என கூறி கொலை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



