மார்த்தாண்டம், ஜூன் 22 –
குமரி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய வர்த்தக நகரமான மார்த்தாண்டம் அருகே கொடுங் குளம் பகுதியில் கொல்லக்குளம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலம் மற்றும் 1500 மேற்பட்ட குடியிருப்பு வாசிகளின் முதுகெலும்பாக இந்த குளம் உள்ளது. ஆனால் தற்போது மார்த்தாண்டம் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை உட்பட்ட பல கழிவுகள் மழை நீர் ஓடை வழியாக பாய்ந்தோடி கொல்ல குளத்தில் கலந்து வருகிறது.
இந்த குளத்தை தூர் வாரி சீரமைத்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இதனால் இந்த குளம் பாசி நிறைந்து, பிளாஸ்டிக் கழிவுகள் கலக்கும் கழிவு நீர் குளமாக மாறி உள்ளது. இந்த குளத்தின் அருகே உள்ள குடிநீர் கிணறும் இதே அவல நிலை நீடிக்கிறது. இந்த குளத்தின் உபரி நீர் வெளியேறி விவசாய தேவைக்காக செல்லும் மதகு சமூக விரோதிகளால் காங்கிரீட் கலவை கொண்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கழிவுகள் தேங்குவதால் இந்த குளம் பயனற்று துர் நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இந்த பகுதியில் பல தொற்று நோய்கள் பரவி வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க பொது பணித்துறை மற்றும் நகராட்சி, மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனுக்கள் கொடுத்தும் இது வரை நடவடிக்கையும் எடுக்காததால் இந்த குளம் முழுவதும் கழிவு நீர் சேகரிப்பு கிடங்கு போல் மாறி வருகிறது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .



