நாகர்கோவில் பிப் 10
தமிழகத்தின் இரண்டு முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், தாம்பரத்திலிருந்து கொச்சுவேலி செல்லும் எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரயில் பயணிகள் தங்கள் பயண திட்டத்தை அதற்கேற்றவாறு மாற்றிக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்ல மக்கள் பெரும்பாலும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த செலவில் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் பயணமே பயணிகளின் முக்கிய தேர்வாக இருக்கிறது.
பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் தினம்தோறும் இயக்கப்படுகிறது.
இதேபோல சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை கரூர் வழியாகவும் தென் மாவட்டங்களுக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணி மற்றும் பிற காரணங்கள் காரணமாக அவ்வப்போது ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் இரண்டு முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15க்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு செல்லும் வண்டி எண் 06012 எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் மாதம் 13, 20, 27, மே மாதம் 4 ,11, 18, 25, ஜூன் மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதே போல தாம்பரத்திலிருந்து மதியம் 3.30க்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வண்டி எண் 06011 எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் 14, 21, 28, மே 5 ,12, 19, 25 ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல தாம்பரத்திலிருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு கொச்சுவேலி செல்லும் வண்டி எண் 06035 எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் 11, 18, 25, மே 2, 9,16, 23, 30 ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல மறு மார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து இரவு 3:25க்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் வண்டியின் 06036 எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் 13, 20, 27, மே 04, 11, 18, 25, ஜூன் 01, 08, 15, 22, 29 ஆகிய தேதியில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. குறிப்பிட்ட தேதியில் அந்த ரயில்களில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



