சுசீந்திரம், ஆக. 30 –
பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தாணுமாலயா சுவாமி சன்னதி தென்திசையில் அமைந்துள்ள திருவேங்கட விண்ணவப்பெருமாள் சுவாமிக்கு வருடம் தோறும் ஆவணி மாதம் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதுபோல இந்த ஆண்டு ஆவணி திருவிழாவிற்காக இன்று காலை 8:15 மணிக்கு கொடி மரத்திற்கு பூஜைகள் செய்து கொடியேற்று நடைபெற்றது.
தொடர்ந்து பத்து நாட்களும் காலை மாலை வேளைகளில் சுவாமி அம்பாள், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர்களை அலங்கரிக்க செய்து கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினம்தோறும் காலை திருவேங்கட விண்ணவப் பெருமாளுக்கு தங்க வெள்ளி குடங்களில் அபிஷேகமும் நடைபெறும். கொடியேற்றில் முன்னாள் இந்து அறநிலையத்துறை அறங்காவல் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, கோவில் கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், தாணுமாலயசுவாமி பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



