கன்னியாகுமரி, செப். 20 –
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சர்வதேச கடற்கரை தூய்மை தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனாகலந்து கொண்டு, தூய்மை பணியை துவக்கி வைத்து, உறுதி மொழியேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து சுற்றுசூழல் குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது: கன்னியாகுமரி என்றவுடன் நம் அனைவரது நினைவிலும் வருவது அய்யன் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, முக்கடலும் சங்கமிக்கும் கடற்கரை பகுதியாகும். இந்த கடற்கரை பகுதி உலகிலேயே மூன்று கடல்களும் சங்கமிக்கும் ஒரு சில பகுதிகளில் நமது கன்னியாகுமரி கடற்கரை பகுதியும் ஒன்றாகும். பொதுமக்கள் ஆகிய நாம் அனைவரும் நாம் இருக்கும் இடத்தில் தேவையற்ற குப்பைகளை சேர்க்கக்கூடாது. கன்னியாகுமரி பேரூராட்சி வாயிலாக காலை முதல் மாலை வரை தினமும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களுடன் இணைந்து நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பொதுமக்களும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கும் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
குமரி மாவட்டத்தில் 67 கிலோ மீட்டர் நீளத்தில் கடற்கரை உள்ளது. பயன்பாட்டுக்கு பின் தூக்கி எறியப்படும் பாலித்தீன் பைகள் மலை போல் குவிந்து கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது. உணவுப் பொருட்களை உண்டு விட்டு அதன் கவர்களை அப்படியே விட்டு செல்கிறோம். ஐஸ்கிரீமை சாப்பிட்டுவிட்டு தூக்கி எறிகிறோம். இவைகள் எல்லாம் கடலில் தான் சென்று சேருகின்றன. கடற்கரைகள் எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால் அது கடல் வளத்தையும் கடல் வாழ் உயிரினங்களையும் கடற்கரைகளில் வாழும் மக்களையும் பாதிக்கும். எனவே பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் கடற்கரையினை சுத்தமான வைத்திருக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் பாரதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.



