நாகர்கோவில், மார்ச் 28 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைவாழ் பழங்குடியினர் வசிக்கும் 42 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள காணி பழங்குடியின மக்கள் தங்களது வாக்கினை செலுத்த போக்குவரத்திற்கு அதிக செலவினை செய்தும், மலையிலிருந்து இறங்கி நீண்ட தூரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று, தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டிய நிலையுள்ளது.
இக்கிராமங்களில் உள்ள மலைவாழ்மக்கள் வாக்களிக்க முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மலைவாழ் மக்கள் அனைவரும் தங்கள் வாக்கினை தவறாது செலுத்தி தங்கள் ஜனநாயக கடமையினை நிறைவேற்ற காணி பழங்குடியின மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, பழங்குடியினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பேச்சிப்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அரசு ரப்பர் கழகத் தோட்டங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சிபாறை ஊராட்சிக்குட்படட மாங்காமலை மலைப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மலைவாழ் காணி பழங்குடியின மக்களை இன்று நேரில் சந்தித்து, ஜனநாயக கடமையான வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார். தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ரப்பர் தோட்ட பணியாளர்கள், பழங்குடியினர் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



