மார்த்தாண்டம், மே 1 –
குலசேகரம், மணலிவிளை பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் மணப்பெண்ணின் உறவினரான மார்த்தாண்ட பகுதியை சேர்ந்த சாரதா (54) என்பவர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். திருமண முகூர்த்தம் முடிந்த பின்னர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சாரதாவின் 6 வயது பேரன் அழுது கொண்டு இருந்துள்ளான். ஏன் என்று கேட்டபோது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை வாலிபர் ஒருவர் பறித்து சென்றதாக கூறினான்.
இதைத் தொடர்ந்து விசாரித்த போது, அந்த பகுதியை சேர்ந்த ஜெரால்டு (34) என்பவர் நகை பறித்தது தெரிய வந்தது. உடனடியாக திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் சுற்றி வளைத்து ஜெரால்டை பிடித்தனர். ஆனால் அவர் தான் நகை பறிக்கவில்லை என்று சாதித்து வந்தார். ஆனால் சிறுவன் ஜெரால்டு செயினை பிடித்து இழுத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து குலசேகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஜெரால்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது சிறுவனிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜெரால்டு வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு மறைத்து வைத்திருந்த நகையை மீட்டனர். இது குறித்து சாரதா கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


