மார்த்தாண்டம், ஜூன் 12 –
கன்னியாகுமரி மாவட்டத்தின் குற்றாலம் என திற்பரப்பு அருவியை அழைக்கின்றனர். இந்த அருவியில் ஆண்டில் அனைத்து நாட்களிலும் தண்ணீர் அருவி வழியாக விடுவதால் சுற்றுலா பயணிகள் ஏராளம் பேர் வந்து செல்கின்றனர். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் குமரி மாவட்டம் வரும் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கும் வருவது வழக்கம்.
இந்த நிலையில் குமரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் மலையோர பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகள், நீர் நிலைகள் மற்றும் குளம், குட்டைகளில் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கோதையாற்றில் நீர் வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க செல்லாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைத்து காவல்துறை மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.



