தருமபுரி, மார்ச் 12 –
தருமபுரி மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பாக நடைபெறும் விழிப்புணர்வு பேரணி மற்றும் மின்னணு விழிப்புணர்வு விளம்பர வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மின்னணு வாகன பிரச்சாரத்தினை சாலை விதிகளை மதிப்போம் – சிறார்களின் உயிரை காப்போம், ஒரு நிமிட அலட்சியம், ஒரு குடும்பத்தின் வாழ்நாளையே மாற்றி விடும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். தலைக்கவசம், சீட் பெல்ட் சாதாரணமாக உங்களுக்கு தெரியலாம். ஆனால் அது உயிரைக் காக்கும்.
18 வயதிற்கு குறைவான சிறார் வாகனம் ஓட்டினால், பெற்றோர் அல்லது வாகன உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதம். வாகனத்தின் பதிவு ரத்து செய்யப்படலாம். சம்பந்தப்பட்ட சிறாருக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி கல்லூரி மாணவ,மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வள்ளலார் திடல் வரை துண்டு பிரசகங்கள் விநியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோட்டாட்சியர் காயத்ரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



