நாகர்கோவில், நவ. 12 –
இந்திய அஞ்சல் துறையில், மாணவர்கள் ஸ்பீடு போஸ்ட் சேவைகளுக்கு 10% சிறப்பு தள்ளுபடி பெறலாம் என தெரிவித்து கன்னியாகுமரி கோட்டம், அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்திய அஞ்சல் துறை, மாணவர்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், மத்திய மாநில அரசு ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு அனுப்பும் தகவல்தொடர்புகளை ஸ்பீட் போஸ்ட் சேவை வழியாக அனுப்புவதற்கான தபால் கட்டணங்களில் 10% தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சலுகை நவம்பர் 1, 2025 முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் அஞ்சல் அலுவலகங்களில் முன்பதிவு செய்யும் போது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் மாணவர் அடையாள அட்டையை காண்பித்து 10% சிறப்பு தள்ளுபடியை பெற்றுக் கொள்ள முடியும். அனுப்புநர் ஒரு மாணவராக இருக்க வேண்டும்.
மேலும் முகவரி பெறுபவர் இதே போன்றவராக இருக்க வேண்டும் அல்லது கல்வி நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆட்சேர்ப்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் துணை வாரியங்களாக இருக்க வேண்டும். தபால் அலுவலக கவுண்டர்களில் செய்யப்படும் முன்பதிவுகளுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி கிடைக்கும். அஞ்சல் உறையில் “மாணவர் அஞ்சல்” என்று முக்கியமாக குறிப்பிட வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது



