தென்தாமரைகுளம், ஜூன் 4 –
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டதை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளை வரவேற்கும் விழா நடைபெற்றது. இதில் விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
அதனை தொடர்ந்து தேசிய கொடியை ஏற்றி வைத்த விஜய்வசந்த் எம்.பி பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பள்ளி மாணவர்களிடையே படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக கடந்த தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டி, அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
முன்னதாக பள்ளி வளாகத்தில் ரூ8.44 லட்சம் மதிப்பில் 2025-2026ம் ஆண்டிற்கான சத்துணவு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடத்தை திறந்து வைத்து, சமையல் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர் ஆதிலிங்க பெருமாள், வர்த்தக காங்கிரஸ் செயலாளர் கிங்சிலின் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



