நாகர்கோவில், மார்ச் 26 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்டத்திற்குட்பட்ட பத்திரிக்கை, ஊடக செய்தியாளர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது கலெக்டர் செய்தியாளர்களிடையே கூறியதாவது: குமரி மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 15,10,550 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் அனைவரும் தடையின்றி வாக்களிக்க வசதியாகப் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள 180 கல்லூரிகளிலும், சுற்றுலாத் தலங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நமது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7,700 ராணுவ வீரர்கள் ஆன்லைன் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ‘படிவம் 12டி’ வழங்கப்பட்டு வருகிறது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது எனினும், பெரும்பாலான முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் நேரடியாக வாக்குச்சாவடிக்கே வந்து வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் 1800-599-8010 மற்றும் தேர்தல் உதவி எண் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறை நாட்களான 31.03.2026, 01.04.2026, 03.04.2026, 05.04.2026 ஆகிய நாட்களை தவிர்த்து, வரும் 30.03.2026 அன்று முதல் 06.03.2026 வரை வேட்புமனு தாக்கல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.
கன்னியாகுமரி தொகுதிக்கு தோவாளை(இ) பூதப்பாண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், நாகர்கோவில் தொகுதிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், குளச்சல் தொகுதிக்கு குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம், பத்மநாபபுரம் தொகுதிக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்திலும், விளவங்கோடு தொகுதிக்கு விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம், கிள்ளியூர் தொகுதிக்கு கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெறப்படுகின்றன. ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய விரும்புவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட நேரமே பொருந்தும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தேர்தல் விழிப்புணர்வு கண்காணிப்பு அலுவலர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, ஊடக கண்காணிப்பு மற்றும் ஊடக சான்று கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



