திருப்பத்தூர், ஆக. 1 –
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடையாஞ்சி ஊராட்சியில், தலைமை நீர் உந்து நிலையம், பட்டுப்பூச்சி வளர்ப்பு கூடம், மல்பெரி தோட்டம், தும்பேரி ஊராட்சியில் அண்ணாநகர் சோதனைச் சாவடி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடையாஞ்சி ஊராட்சியில் உள்ள தலைமை நீர் உந்து நிலையத்தில் போர்வெல் மூலம் குடிநீர் சேகரிக்குப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பேரி ஊராட்சியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி (த/பெ. தங்கவேலு) அவர்களுக்கு. பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.4.30 இலட்சம் மானியத்தில் 1,200 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பட்டுப்பூச்சி வளர்ப்பு கூடத்தையும், 2 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்டு வரும் மல்பெரி தோட்டத்தையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார். அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகயிடம் சாகுபடி செய்துள்ள நெல், நிலக்கடலை, உள்ளிட்ட பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, தும்பேரி ஊராட்சியில் உள்ள அண்ணா நகர் சோதனைச் சாவடியில் (செக் போஸ்ட்) மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகள், வாகனத் தணிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வுகளின் போது, வேளாண்மை இணை இயக்குநர் மணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தீபா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) அப்துல் ரஹ்மான், வாணியம்பாடி வட்டாட்சியர் சுதாகர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



