நாகர்கோவில், மே 26 –
தமிழகம் முழுவதும் கல் குவாரிகளில் ஆய்வு செய்து விதிமீறல்கள் இருந்தால் அவற்றை மூட நடவடிக்கை எடுக்க தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுகள் நடந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி இயக்குனரால் ஆளில்லா விமானம் மூலம் நடத்திய ஆய்வில் 15 கல்குவாரிகளில் ஆய்வு நடத்தியதாகவும், அதில் 2 கல்குவாரிகளில் விதிமீறல்கள் உள்ளதாகவும் அமைச்சரின் உத்தரவுப்படி மூடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் குமரி மாவட்டத்தில் இருந்த 15 கல்குவாரிகளில் ஆறு மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாக கடந்த 2026 மார்ச் மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வழங்கப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சட்டவிரோதமாக தோட்டியோடு பகுதியில் இயங்கிய 2 கல்குவாரிகள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி சோதனை நடத்தி கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் சட்ட விரோதமாக வெடி பொருட்கள் வைத்திருந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்து அந்த கல்குவாரிகள் கடந்த மார்ச் மாதமே மூடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த போது ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்தியதாகவும், அதில் 2 கல்குவாரிகள் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறி மூடப்பட்டதாகவும் அமைச்சருக்கு தவறான தகவல்கள் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இரண்டு கல் குவாரியையும் மூட அமைச்சர் உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பின்னர் புதிதாக பொறுப்பேற்று இருந்த இயற்கை வளங்கள் துறை அமைச்சருக்கு பொய் தகவல்களை வழங்கி அல்வா கொடுத்த விவகாரம் தற்போது ஆதாரங்களுடன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.
குமரியில் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தவிர ஏனைய அதிகாரிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளான நிலையில் அவர்களை இதுவரை குமரி மாவட்டத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவு புதிய அரசியலில் புதிதாக பதவியேற்று குமரி மாவட்டத்திற்கு வந்த அமைச்சருக்கு பொய் தகவலை கொடுத்து ஏமாற்றும் அளவுக்கு அதிகாரிகள் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது.
ஆகவே குமரி மாவட்டத்தில் தற்போது பணிபுரிந்து வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தவிர ஏனைய அதிகாரிகளை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதோடு, குமரி மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் ஆய்வு செய்ய சிறப்பு அதிரடிப்படையில் நேர்மையான அதிகாரிகளை நியமித்து ஆய்வு செய்தும் அதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளையும் நேர்மையான சிறப்பு அதிகாரிகளை நியமித்து ஆய்வு செய்தால் மட்டுமே தமிழகம் முழுவதும் விதிமீறல்களில் ஈடுபட்ட கல்குவாரிகள் எவை எவை என கண்டுபிடிக்க முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


