களியக்காவிளை, மார். 25 –
களியக்காவிளை அருகே மீனச்சல் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த குறுஞ்சேரி பகவதி அம்மன் காவு புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து விக்ரக பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கடந்த 23 தேதி முதல் கணபதி ஹோமம், ஆச்சார்ய வர்ணம், பிராசாத சுத்தி, வாஸ்து கலசம், வாஸ்து பலி ஜலாதி வாசம் உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது. கோயில் தந்திரி தலைமையில் பகவதி அம்மன், நாகர், கணபதி விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்து தொடர்ந்து யாக குண்டத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை வேத பண்டிதர்கள் மந்திரங்கள் ஓதி மேளதாளம் முழங்க ஆலயத்தை வலம் வந்து கோயில் கருவறை கோபுர கலசங்களுக்கும், கணபதி உட்பட உப கோயில் கும்ப கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீடம் சாமி சைதன்யானந்த மகாராஜ் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



