தென்தாமரைகுளம், பிப். 2 –
தென்தாமரைகுளம் அருகே உள்ள ஈச்சன்விளை பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் சாமி (19). கொத்தனார். இவர் சம்பவத்தன்று தனது நண்பரான 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் முகமது ரிகானுடன் டீ குடிப்பதற்காக கன்னியாகுமரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
சாமி, மோட்டார் சைக்கிளை ஓட்ட முகமது ரிகான் பின்னால் அமர்ந்து இருந்துள்ளார். அவர்கள் அகஸ்தீஸ்வரம் கீழ சாலை பகுதியில் வரும் போது அந்த வழியாக வந்த ஆட்டோ இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக முகமது ரிகான், சுசீந்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்து குறித்து சாமி அளித்த புகாரின் பேரில் தென்தாமரை குளம் போலீசார் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அஜித் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


