நாகர்கோவில், ஜூலை 8 –
கன்னியாகுமரி மாவட்ட முக்கிய இரயில் நிலையங்களில் ₹10 கட்டணத்தில் பேட்டரி கார் வசதி மற்றும் ஆன்லைன் முன்பதிவு தொடங்க கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில் சந்திப்பு, நாகர்கோவில் டவுன், இரணியல் மற்றும் குழித்துறை ஆகிய இரயில் நிலையங்கள் திருவனந்தபுரம் கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித் தரும் மிக முக்கியமான நிலையங்களாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீகப் பயணிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் இந்த முக்கிய இரயில் நிலையங்களில் இதுவரை பயணிகளின் அவசரத் தேவைக்கான பேட்டரி கார் (மின்கல வாகன) வசதி இல்லாமல் இருப்பது பெரும் குறையாக உள்ளது.
மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ஒரு பயணிக்கு வெறும் 10 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் பேட்டரி கார் வசதி மிகச் சிறப்பாக இயக்கப்பட்டு வருகிறது. இந்தச் சேவையானது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அதிக சுமையுடன் குழந்தைகளோடு பயணிக்கும் குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதேபோன்ற வசதியை, நீளமான நடைமேடைகளைக் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நான்கு இரயில் நிலையங்களிலும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு மின்னஞ்சல் வழியாக கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை மனுவில், திருநெல்வேலி நிலையத்தைப் போல இங்கும் ஒரு பயணிக்கு 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளி ஊர்களில் இருந்து இரயிலில் வந்து இறங்கும் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி இந்தச் சேவையைப் பயன்படுத்தும் வகையில், ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலமாக ஆன்லைனிலேயே முன்பதிவு செய்யும் வசதியையும் இதனுடன் இணைத்து ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக திருவனந்தபுரம் இரயில்வே நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.



