நாகர்கோவில், ஜூன் 10 –
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை நான்குவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: கேரளா – தமிழ்நாடு எல்லையான களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான என்.எச் 47 நான்கு வழிச்சாலையில் கூடுதல் கட்டுமான பணிகள் ரூ.1041.3 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெட்டி வடிவக்குழாய் பாலப்பணி 15, பெட்டி வடிவக்குழாய் பாலங்கள் அகலப்படுத்தும் பணி 15, சிறிய பாலங்கள் 14, பெரிய பாலங்கள் 25, வாகனங்கள் செல்வதற்கான சுரங்கப்பாதை பணிகள் 9, வாகனங்களுக்கான மேம்பாலங்கள் 12, பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள் 2, ரயில்வே மேம்பாலம் 2, வடிகால் பணிகள், 1 சுங்கசாவடி, பேருந்து நிறுத்தங்கள், நிழற்கூடைகள், சரக்கு வாகனங்கள் நிறுத்துமிடம், சேவைச்சாலைகளை அகப்படுத்துதல் என பல்வேறு பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதில் 2 பெட்டி வடிவக்குழாய் பாலங்கள் அகலப்படுத்தும் பணியும், 2 சிறிய பாலங்கள் பணியும், 2 சுரங்கப்பாதை பணியும், 7 பெரிய பாலங்கள் பணியும், ஒரு ரயில்வே மேம்பால பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணியால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக வழுக்கம்பாறை, ஒழுகினசேரி, புத்தேரிகுளம், சுங்கான்கடை, தோட்டியோடு, வாழ்வச்சக்கோஷ்டம், பள்ளியாடி, காப்புக்காடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை துறையினர் இப்பணிகளை மேலும் தாமதிக்கமால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எந்தவிதமான காரணமும் கூறமால், தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது என கலெக்டர் கூறினார்.
நடைபெற்ற ஆய்வுகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் சச்சின் குமார், திட்ட பொறியாளர் சிவா, மாவட்ட நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



