நாகர்கோவில், ஜூலை 31 –
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு வட்டத்துக்குட்பட்ட கல்லாடிமாமூடு மினிவிளையாட்டு அரங்கம், தச்சமலை அரசு தொடக்கப்பள்ளி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: கல்லாடிமாமூடு பகுதியில், ரூ.3 கோடி மதிப்பீட்டில் அரசு சார்பில் புதிதாக மினி அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இவ்விளையாட்டு அரங்கம் வாயிலாக கல்லாடிமாமூடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டு, தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நவீன வசதிகளுடன் கூடிய இந்த மினி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உடற்பயிற்சி செய்ய ஏதுவான பகுதிகள், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான வசதிகளும் உள்ளது.
தொடர்ந்து விளையாட்டு மைதானத்தில் பொதுகழிப்பிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வேலி மற்றும் அரங்கத்திற்கு வரும் வழிகளில் தெருவிளக்குகள் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தச்சமலை அரசு தொடக்கப்பள்ளியினை நேரில் பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்ட மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஏற்றக்கோடு பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் (2025-2026) ரூ.28.90 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கன்வாடி மையம் கட்டுவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு, தற்போது பணிகள் நடைபெறவில்லை. அருகில் உள்ள நிலப்பிரச்சனையினை விரைந்து முடித்து, பணிகளை துவக்க வட்டாட்சியர் உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வுகளில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, திருவட்டாறு வட்டாட்சியர் மரகதவல்லி, வட்டார வளர்ச்சி அலுவலர், துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



